ஹவாலா பணப்பரிமாற்ற கும்பலுடன் ஜாபர்சாதிக்குக்கு தொடர்பு?

Published: 20/04/2024 14:27 PM Updated: 20/04/2024 14:27 PM
Ads
news-banner
டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்த தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 4 பேரும் கைதாகியுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் மூலமாக ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடியை சுருட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்திருப்பது அம்பலமானது.
இது தொடர்பாக சினிமா இயக்குனர் அமீரிடம் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சினிமா உலகில் ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த மேலும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் ஜாபர்சாதிக் ஹவாலா பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான தகவல்களை அவர்கள் திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மண்ணடியை சேர்ந்த ஹவாலா பணப்பரிமாற்ற தரகர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக ஜாபர்சாதிக், மண்ணடியை சேர்ந்த தரகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து அதன் பின்னணி தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

YOU MAY ALSO LIKE